திருச்சி அருகே பயன்பாடற்ற நிலையில் உள்ள வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரைச் சேர்ந்தவர் முகமது சுல்தான் (53). காய்கறி வியாபாரியான இவரது வீடு, சிதிலமடைந்து இடிந்து விழுந்ததால் அதே பகுதியில் வேறு இடத்தில்குடியேறினார்.இருப்பினும் சிதிலமடைந்த வீட்டில் இடிந்துவிழாத கட்டடம் இருந்த பகுதியில் பொருள்களை வைத்து பூட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த வீட்டுக்கு சனிக்கிழமை அதிகாலை சுல்தானின் மகன் வந்திருந்தார். பொருள்களை விலக்கி பார்த்தபோது ரத்தக் காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கல்யாண், டிஎஸ்பி சீனிவாசன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலையான நபர் யார் என்பதும், கொலை செய்தவர் யார் என்பதும் தெரியவில்லை.
இதுதொடர்பாக, சோமரசம்பட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.