தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர்களை அனுமதிப்பதைக் கண்டித்து, சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக த.மா.கா. மாணவரணி முடிவு செய்துள்ளது.
திருச்சியில் தமிழ்மாநில காங்கிரஸ் 4 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவரணி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில மாணவரணி தலைவர் எம். சுனில்ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோஜ் கைலாசம், திருச்சி மாடட்ட தலைவர் சுதன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச்செயலாளர் விடியல் எஸ் சேகர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். மாநகரத் தலைவர் நந்தா செந்தில், மாவட்ட தலைவர்கள் கே.வி.ஜி. ரவீந்திரன்(வடக்கு), குணா (தெற்கு) , விவசாயப் பிரிவுத் தலைவர் புலியூர் நாகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து சுமார் 85 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக காத்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில், புதிய தொழில்முனைவு செயல் திட்டத்தை அரசு தீட்டவேண்டும். தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதிக்கும் முறை தொடர்ந்து வருகின்றது. இதனால் தமிழ்நாட்டில் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய் விடுகின்றது. எனவே தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை டிஎன்பிஎஸ்சி இலவசமாக நடத்த வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் மேற்கொள்ளப்படும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.