பணி நேரத்தை அதிகரிக்க வேண்டும், நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி முதன்மைப் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். இதில் ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நேரத்தை 6-லிருந்து 8 மணி நேரமாக உயர்த்த வேண்டும். பிரதி மாதம் 7-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணப்பயன்களை வழங்க வேண்டும். ரூ. 7,000 போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தேவராஜ், தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.