திருச்சி மாநகர போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை கே.கே. நகர் சுந்தர் நகர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பர்னிச்சர் கடை முன் ஒரு வேன் நின்றுகொண்டிருந்தது. வேனை சோதனையிட்ட போது, அதில் யாரும் இல்லை. அருகிலிருந்த பர்னிச்சர் கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த போலீஸார், கடை உரிமையாளரான எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்த ஆசிக் முகம்மதுவை வரவழைத்து, கடையில் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா என விசாரித்தனர். விசாரணையில், அவரது கடையில் ஏதும் திருட்டு போகவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வேனைத் திறந்து பார்த்த போது, அதனுள் இருந்த பிளாஸ்டிக் கூடைகளில் பல ஆயிரம் மதிப்புள்ள பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் இருந்தன.
பர்னிச்சர் கடைக்கு சில 100 மீட்டர்கள் தூரமுள்ள உள்ளாடை விற்பனையகத்தின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளாடைகளை திருடியுள்ளனர்.
தொடர்ந்து, பர்னிச்சர் கடையில் திருட முயன்ற போது, போலீஸார் வருவதை அறிந்த அந்த மர்ம கும்பல், ஆடைகளை வேனுடன் விட்டு விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதுகுறித்து உள்ளாடை விற்பனையகத்தின் உரிமையாளரான உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் கே.கே. நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார், திருட்டு கும்பல் விட்டுச் சென்ற வேனை கைப்பற்றி, வழக்குப் பதிந்து அருகிலுள்ள சிசிடி கேமிரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வேனின் பதிவெண் போலியானது என்பது தெரியவந்துள்ளது.