ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பேட்டரி கார்களுக்கான கட்டணம் உள்ளிட்டவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய செயலரும், ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு தலைவருமான எச். ராஜா தெரிவித்தார்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: ரயில் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு கிடைக்கும் சௌகரியங்கள், அசௌகரியங்கள் குறித்து வந்த தகவல்களின் அடிப்படையில், பயணிகள் நலன் மற்றும் பாதுகாப்புகள் குறித்து ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ரயில் நிலையங்கள் மட்டுமின்றி ரயில்களிலும் பயணிகள் வசதி மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ரயில் நிலையங்களின் ஏ, பி, எனப்படும் தரவரிசைப்படி அவற்றுக்கேற்ற வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு நடைமேடைக் கட்டணம், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பேட்டரி கார்களுக்கான கட்டணங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. அவை மட்டுமின்றி பயணிகளின் எவ்விதமான புகார்களாக இருந்தாலும் அவை குறித்து ரயில்வே வாரியத்துக்கு தகவல் அளித்து, கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.