திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில் 16 மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் உள்பட 69 பேருக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 363 மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி சாதனங்களை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நலிவுற்றோருக்கான தனிநபர் கடனுதவி, முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணத் தொகை, விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை உள்பட 53 பேருக்கு ரூ. 8.56 லட்சத்தில் நலத்திட்டஉதவிகளையும் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. பஷீர், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் பாலாஜி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.