மத்திய அரசின் திட்டங்களின் பயன் தகுதியுள்ளவர்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தினார் மத்திய ரசாயன மற்றும் பெட்ரோலிய ரசாயனத் துறை இயக்குநர் தே. பிரவீன்.
திருச்சி மாவட்டத்தில் ஏப்.14 தொடங்கி மே 5 வரை 8 ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம் சுவராஜ் அபியான் திட்ட முகாம் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் திருத்தலையூர், மாராடி, சிறுநாவலூர், நஞ்சை சங்கேந்தி, மருதூர், சிறுமருதூர், மேக்குடி, பழூர் ஆகிய 8 ஊராட்சிகளில் கிராம் சுவராஜ் அபியான் திட்ட முகாம் நடைபெறுகிறது. ஊரக வளர்ச்சித் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை, சுகாதாரத் துறை, வேளாண் துறை, மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு துறை சார்பிலும் துறை சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்தக் கிராமங்களில் தகுதியுள்ளவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அனைத்துத் துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நிகழ்வுக்கானஅறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் தே. பிரவீன்.
கூட்டத்தில், மத்திய நிதித் துறையின் சார்பு செயலர் நரசிம்மன், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, வேளாண் இணை இயக்குநர் எஸ்.எம். உதுமான் முகைதீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்) சாந்தி, ஊரக வளர்ச்சித் துறைத் திட்ட இயக்குநர் மலர்விழி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.