திருச்சியிலிருந்து உரிய அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்ற ரூ. 32.71 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தாள்கள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்கல் 3.30 மணிக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும், சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், திருச்சியைச் சேர்நந்த ஜனாலுபுதீன் என்ற பயணி தனது உடைமைகளுக்குள் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்கள் (கரன்சி) கட்டுக்களை மறைத்து வைத்திருந்தார். அவற்றைக் கொண்டு செல்வதற்கான முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை. இதனையடுத்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதை அடுத்து, அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தாள்களின் இந்திய ரூபாய் மதிப்பு 32, 71, 340 ஆகும்.