கொள்ளிடம் பழைய பாலம்: தூண் இரண்டாக பிளந்து இடிந்து விழும் அபாயம்

கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண் இரண்டாக பிளந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. 

கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண் இரண்டாக பிளந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. 
1850இல் கட்டப்பட்டு, 1928இல் ஆங்கிலேயர்களால் புதியதாக மாற்றியமைக்கப்பட்ட  பழைமையான பாலம் கொள்ளிடம் பழைய பாலம். இந்த பாலத்தில் மொத்தம் 23 தூண்கள் உள்ளன. இதன் மேல் இரும்பு  கேரிடர்கள்  வைத்து சாலை அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிகரித்த வாகனப் பெருக்கத்தின் காரணமாகவும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் 8 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதுதடை செய்யப்பட்டது. மேலும், 2016இல் இந்த பாலத்துக்கு மாற்றாக அருகிலேயே ரூ.76 கோடி மதிப்பில் புதிய பாலம் திறக்கப்பட்டது. இதனால், பழைய பாலத்தில் இலகுரக வாகனங்கள், இருச்சகர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன.
இந்நிலையில் செக்போஸ்ட் அருகில் இருந்து பழையபாலத்தின் 6-ஆவது தூணில்  திடீரென புதன்கிழமை சிறிய விரிசல் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸார் விரைந்து வந்தனர். பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர்.
இதையடுத்து வியாழக்கிழமை தூணில் ஏற்பட்ட விரிசல் மேலும் அதிகரித்து தூண் இரு பகுதிகளாக இரண்டாக பிளந்தது. பிளவு வழியாகவும் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பிளவு காரணமாக இரும்பு கேரிடர்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. மேலும், 6ஆவது தூணுக்கு மேலே உள்ள சாலைப் பகுதியிலும் விரிசல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி,  மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆகியோர்  புதிய பாலத்தின் வழியாக பழைய பாலத்தில் உள்ள விரிசலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கிருஷ்ணசாமி கூறியது: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தின் 18ஆவது தூணில் ஏற்பட்ட விரிசல் மேலும் அதிகரித்து பிளவு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு 2 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரித்தால் பாலத்தின் தூண் மேலும் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும் இப்போதைய சூழலில் பிளவு ஏற்பட்ட அளவில் நிலைத்தன்மையுடன் தொடருகிறது. தூண் முழுவதும் சரிந்தாலும் இரும்பு கேரிடர்கள் மட்டுமே கீழே சரியும். இதர தூண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து, மின்சாரம் தடை செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் இரவு பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com