மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தட்டச்சு மையம் வைத்து நடத்தி வந்தவர் மேல சிந்தாமணியைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி (62). சனிக்கிழமை பிற்பகல் 2 ஆவது மாடியில் உள்ள தனது மையத்தின் விளம்பர பதாகை சாய்ந்து கிடந்ததை சரிசெய்ய முயன்றபோது தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தார். இது குறித்து கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆற்றில் மூழ்கியவர் : திருச்சி பாலக்கரை உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் (45), புரோட்டா மாஸ்டர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்னூர் அண்டகொண்டான் பகுதி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் மதுபோதையில், நின்றிருந்தவர் தடுமாறி தண்ணீரில் விழுந்து விட்டாராம். அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்றும் முடியவில்லை, தண்ணீரி அடித்துச்செல்லப்பட்ட அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உறவினர்கள் அவரைத் தேடுகின்றனர்.
காவிரியில் மூழ்கியவர் குறித்த தகவல்: மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒருவர் காவிரியில் மூழ்கியதாகவும், தீயணைப்பு வீரர்கள் அவரைத் தேடிச் சென்றதாகவும் தகவல்கள் பரவின. இது தொடர்பாக கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.