திருச்சி பொன்மலைப் பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனபால் மனைவி பிரேமாவதி (65). கடந்த ஆக. 17ஆம் தேதி மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தபோது கூரியர் நிறுவனத்தில் இருந்து வருவதாகக் கூறி 3 இளைஞர்கள் வீட்டிற்குள் வந்தனர். அப்போது திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 55 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.
ரூ. 75,000 திருட்டு : திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜே. லியோன் வினோத்குமார். இவர் வெள்ளிக்கிழமை மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள உணவு விடுதியின் முன் தனது காரை நிறுத்தி உள்ளே சென்று உணவருந்திவிட்டு வந்து பார்த்தபோது காரின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பையில் இருந்த ரூ. 75,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.