விசாரணைக்கு 3 திருநங்கைகளை போலீஸார் அழைத்து வந்ததை அடுத்து, திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் கெடுபிடி அதிகம் இருப்பதாக வந்த புகாரையடுத்து மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் நடத்தி சோதனையின்போது, அபிநயா (26), நித்யகல்யாணி (21), யுவராணி (28) ஆகிய 3 திருநங்கைகளை பிடித்து விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருநங்கைகள் திரண்டு கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.தொடர்ந்து காவல் ஆய்வாளரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டவர்களை நாங்களே ஒப்படைக்கிறோம். இவர்கள் மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து, அவர்கள் குறிப்பிட்ட பிரியா, பூஜா ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அதன்பிறகு ஏற்கெனவே அழைத்து வந்த மூவரையும் போலீஸார் விடுவித்தனர். பிரியா, பூஜா இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு இருவரும் உடல் நிலை சரியில்லை எனக்கூறி சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
இதனையடுத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.