கன்னியாகுமரி முதல் சென்னை ஜார்ஜ் கோட்டை (தலைமைச் செயலகம்) வரையில் விவசாயிகள் நடத்தவுள்ள நடைபயணத்துக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய மண்டல காவல்துறைத் தலைவரிடம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பி. அய்யாக்கண்ணு, செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பது: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை ஜார்ஜ் கோட்டை வரை பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்காக அனுமதி கோரி தமிழகக்காவல்துறை இயக்குநரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு மனு அளித்தார். ஆனால், காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அய்யாக்கண்ணு. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சில உறுதிமொழிகளுடன் தமிழகக் காவல்துறையில் உள்ள 4 மண்டலத்தலைவர்களிடம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி, மறியலில் ஈடுபடமாட்டோம், தர்னா போராட்டத்தில் ஈடுபடமாட்டேம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியது: நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகக் காவல்துறையின் மத்திய மண்டலம், தென்மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 4 காவல்துறைத் தலைவர்களிடமும் மனு அளிக்கவுள்ளோம். காவல்துறை அனுமதி கிடைக்காவிட்டாலும் திட்டமிட்டபடி மார்ச் முதல் வாரம் பேரணியை தொடங்கி நடத்துவோம் என்றார்.