முன்னாள் படைவீரர்கள் கழக விளையாட்டுப் போட்டி திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு டெக்ஸ்கோ தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளை தமிழக அரசின் பொதுத்துறைகூடுதல் செயலர் மைதிலி கே. ராஜேந்திரன், தொடக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தப் போட்டியில், கைப்பந்து, சதுரங்கம், மெதுவாக நடந்து செல்லுதல், 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறும் வீரர்களுக்கும், சிறப்பிடம் பெறும் வீரர்களுக்கும் டெக்ஸ்கோ விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, டெக்ஸ்கோ பொதுமேலாளர் பி. சாரதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.