திருச்சியில் கள்ளத்துப்பாக்கியுடன் காவலர் கைது செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்கத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி ரயில் துப்பாக்கித் தோட்டாக்கள், போதை பொருள்களுடன் வந்த கமல், பிரதீப் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில் திருச்சியிலுள்ள விடுதியொன்றில் 3 பேர் தங்கி, கள்ளத்துப்பாக்கிகளை விநியோகம் செய்ய இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், ஜன. 26-ல் விடுதியில் நடத்திய சோதனையில் சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய குற்றப்பிரிவுத் தலைமைக் காவலர் பரமேசுவரன் (29), தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த சிவா, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கள்ளத் துப்பாக்கிகள், 10 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லையைச் சேர்ந்த கலைசேகரன், கோழிப்பண்ணை அதிபர் எட்டப்பன், எண்ணூரைச் சேர்ந்த திவ்யபிரபாகரன் ஆகியோரைக் கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில் சென்னையில் துப்பாக்கி பிடிபட்ட வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கும் வகையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து 6 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் எட்டப்பன், கலைசேகரன் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் இவர்களுக்கு மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கள்ளத் துப்பாக்கிகளை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார், குணா மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமுராரி திவாரியை கடந்த 2 நாள்களுக்கு முன் கைது செய்து, திருச்சி நீதித்துறை நடுவர் மன்றம் எண்-6 -இல் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் ஷகிலா உத்தரவிட்டார்.