காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி மலைக்கோட்டை கோயில் முன் இந்து முன்னணி அமைப்பினர் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகரில் உள்ள கோயில்கள், பூங்கா, சுற்றுலாத் தலங்களில் கூடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டம் நடத்துவதாக இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் தாலியுடன் மலைக்கோட்டை கோயிலுக்கு வந்தனர். ஆனால், கோயிலுக்குள்ளோ, மலைக்கோட்டை பகுதியிலோ காதலர்கள் யாரும் இல்லாததால் கோயில் முன் சிறிது நேரம் கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக கோயில் முன் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.