திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் புதன்கிழமை தாற்காலிகமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் துவரங்குறிச்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, புதன்கிழமை வருவாய் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர், டி.எஸ்.பி ஆசைத்தம்பி தலைமையிலான காவல் துறையினர் ஆகியோர் உதவியுடன் உதவி கோட்ட பொறியாளார் சந்திரசேகர் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினர் துவரங்குறிச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கடைவீதி பகுதியில் வெள்ளை விநாயகர் கோயில் படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து புனித வளனார் ஆலயப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆலய வாசலில் இருந்த வளைவின் மேல் ஏறியதையடுத்து, அங்கு பொதுமக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி ஆசைத்தம்பி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேச்சு நடத்தினர். இதில், உரிய முன் அறிவிப்பு அளிப்பது, நில அளவை சரிபார்த்து வரையறுத்த பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி தொடர்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.