புதுதில்லியிலிருந்து திருச்சி வழியாக மும்பைக்கு புதிய விமான சேவையை மார்ச் 25 முதல் தொடங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே புதுதில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் தினசரி விமானப் போக்குவரத்து சேவையை திருச்சி வழியாக மாற்றியமைத்து இந்த புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. புதுதில்லியில் இருந்து வரும் விமானம் திருச்சிக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு வந்து சேரும். பின்னர், 2.30-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு மாலை 4.40 -க்கு சென்று சேரும். இந்த சேவையை வரும் மார்ச் 25 முதல் செயல்படுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இனி திருச்சியிலிருந்து மும்பைக்கும் கூடுதலாக தினசரி விமான சேவையை பெறலாம் என திருச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.