திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 24 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மணப்பாறை அண்ணாவி நகரில் ஆதியன் செட்டியார் மகன்கள் நடராஜன் (50), மாரிமுத்து (41), மகள் செல்வராணி (53) மற்றும் பேரன் முத்துகுமார் (32) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
சனிக்கிழமை அதிகாலை வீட்டின் மேல்தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த நடராஜன் மற்றும் குடும்பத்தினரை பக்கத்தை வீட்டைச் சேர்ந்தோர் அழைத்து வீட்டின் கீழ்தளம் திறந்து கிடப்பதாகக் கூறினர்.இதையடுத்து நடராஜன் கீழே வந்து பார்த்தபோது அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. தகவலறிந்து முத்துக்குமாரும், மாரிமுத்துவும் வந்த நிலையில், மாரிமுத்துவின் 16 கிலோ வெள்ளிப் பொருட்களும், முத்துக்குமாரின் 8 கிலோ வெள்ளிப்பொருட்களும் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் கென்னடி, உதவி ஆய்வாளர்கள் ரூபிணி, ரெக்ஸ் ஸ்டாலின் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்கின்றனர். திருச்சி நிபுணர்கள் கைரேகை பதிவுகளைச் சேகரித்துச் சென்றனர்.