திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் அவரது மகனைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பீமநகர் பென்ஷனர் தெருவைச் சேர்ந்த கிஷார் மனைவி பெனாசீர் (27). இவர்களது 4 வயது மகன் முகித். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிஷார்- பெனாசீர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பெனாசீர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டுக்கு அருகிலிருக்கும் பள்ளியில் யுகேஜி படித்து வரும் தனது மகனை அழைத்து வருவதாகக் கூறி வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து சென்ற பெனாசீர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவரையும், அவரது மகனையும் கண்டுபிடிக்கவில்லை. இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் பெனாசீரின் தாய் ருசியா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.