துறையூர் வட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பழைய பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்திட வலியுறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோலப்போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர், மக்கள் நலச் சங்கத்தினர், அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
வனத்துறை சார்பில்: பச்சமலை டாப் செங்காட்டுப்பட்டியில் வனத்துறையினர், மலைவாழ் மக்களுடன் இணைந்து சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடினர். விழாவுக்கு வனஅலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். வனவர் கைலாசநாதன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், ராஜாஜி, ஆதம்ராபின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மலைவாழ் மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில், மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துறையூர் நீதிமன்றத்தில்: துறையூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி சி. ராஜலிங்கம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். வடிவேல், வழக்குரைஞர் சங்கத் தலைவர் எஸ். தென்னரசு, செயலர் கே.செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.