திருச்சி மாநகராட்சியின் தூய்மைப் பணிக்கு வலுசேர்க்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களது பணியை தொடங்கி வெள்ளி விழா கண்டுள்ளது சண்முகா நகர்.
சண்முகா நகரில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெற்று, குப்பைக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும், மழைக் காலங்களில் சாக்கடைகளில் தண்ணீர் தேங்காமலும், தெருக்களில் தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் புனரமைப்பு பணிகளை தாங்களே மேற்கொண்டுவருகின்றனர். இதுமட்டுமல்லாது, டெங்கு காய்ச்சல் மற்றும் இதர தொற்று நோய்களை தடுக்கஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச நிலவேம்பு கசாயம் வழங்குகின்றனர். மாதம் ஒரு முறை பொது மருத்துவ முகாம்களை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இவை மட்டுமல்லாது பசுமையை வளர்த்தெடுக்கும் வகையில் தங்களது குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதுடன், ஆண்டுக்கு 3 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்து சுற்றுப் பகுதிகளில் வீசி வருகின்றனர். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும், நாள்தோறும் முக்கியச் செய்திகள், விழிப்புணர்வு கருத்துக்களை அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து வருகின்றனர். மேலும், 2017ஆம் ஆண்டுக்கு திருச்சி மாநகராட்சியின் சார்பில் சிறந்த நகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றை சண்முகா நகர் நலச்சங்கம் என்ற பெயரால் 25 ஆண்டுகளாக இடைவிடாது செய்து வருகின்றனர்.
இச் சங்கத்தின் வெள்ளிவிழா (25ஆம் ஆண்டு) அண்மையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு வெள்ளி விழா கல்வெட்டை திறந்து வைத்தார். சந்தனம்ஸ் அசோசியேட்ஸ் உரிமையாளர் அறிவழகன் சங்க வெள்ளி விழா மலரை வெளியிட, மருத்துவர் சிவகுமார் பெற்றுக்கொண்டார். சங்கத் தலைவர் ஆர். சிவகுமார், செயலர் ஆர். ராஜமாணிக்கம், பொருளாளர் எஸ்.வி. வேலாயுதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.