தண்ணீர் அமைப்பு சார்பில் பாரம்பரிய விளையாட்டுகள், சிலம்பம், கரகாட்டத்துடன் சூழல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி- குழுமணி சாலையில் மருதாண்டாக்குறிச்சியிலுள்ள பூமித்தாய் தோட்டத்தில் சனிக்கிழமை மாலை இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினரும், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தம்பதியும், தண்ணீர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வயல்வெளிப் பகுதியில் பொங்கலைக் கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், கரகாட்டம், பறையாட்டம் , பொய்க்கால் குதிரையாட்டம் மற்றும் பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றது.
மேலும், பரதநாட்டிய நிகழ்விலும் மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சிப் பொறியாளர் அமுதவள்ளி, பனானாலீப் உணவகங்களின் உரிமையாளர் இரா. மனோகரன், முன்னாள் அமைச்சர் என். நல்லுசாமி, தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன், ஆர்.கே.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை தண்ணீர் அமைப்பு செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் பேராசிரியர் சதீஷ்குமரன், தாமஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.