திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 4 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கிராப்பட்டி அருணாச்சல நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி இரவு மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது, செந்தில்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர், உள்ளே சென்று பார்த்ததில் 4 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ரொக்கம், பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.