திருச்சி மாவட்டத்தில் தொழிற் பயிற்சி பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத நீண்டகால தொழிற் பிரிவுகள் 54 மற்றும் குறுகிய கால தொழிற் பிரிவுகள் 35 உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் புதிய தொழிற் பயிற்சி பள்ளிகள் தொடங்கவும், ஏற்கெனவே இயங்கி வரும் பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் ஆண்டுதோறும் ஜனவரி 2 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் தொழிற்பயிற்சி பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் அங்கீகாரம் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும். எனவே, புதிதாக தொழிற் பயிற்சி பள்ளிகள் தொடங்கவுள்ளோர் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலும், அங்கீகாரம் புதுப்பிக்க விரும்புவோர் ஜனவரி 31ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.