ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான பிரசாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வரும் எந்தவித பிரசாரத்தையும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வரும் எந்தவித பிரசாரத்தையும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுகவின் வெள்ளி விழா, எனது அரசியல் பொதுவாழ்வின் பொன்விழா என முப்பெரும் விழாவாக ஈரோட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவையொட்டி மாவட்ட மற்றும் மண்டலஅளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டிகளையும் நடத்த உள்ளோம். ஈரோட்டில் நடைபெறும் முப்பெரும் விழா மதிமுகவுக்கு பெரும் உந்துதலாக இருக்கும் என நம்புகிறோம்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசிய மிகச் சிறந்த பேச்சாகும். விவாதத்தில் பங்கேற்று பேசிய தலைவர்களின் பேச்சுகள் கடந்த 4 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியிருக்கிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டிருப்பது எதிர்பார்த்ததுதான்.
அதே நேரத்தில் சிவசேனை, பிஜூ ஜனதாதளம் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தது எதிர்பாராததுதான்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட குறும்படத்தை மக்கள் மத்தியில் ஒளிபரப்புகிறார்கள். பத்திரிகைகளில் விளம்பரம் செய்தல், குறும்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பிரசாரத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில், என்னுடைய மனுவை ஏற்கக்கூடாது என அந்த ஆலையின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் முறையிடுகிறார். மற்ற மனுக்கள் மீது எதிர்ப்பு தெரிவிக்காமல் என் மனு மீது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?. ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது நான் நேரில் ஆஜராகி வாதாடுவேன்.
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், மாணவ, மாணவிகள் கவலை அடைந்திருக்கும் நிலையில், அவர்கள் தலையில் கல்லைப் போடுவது போல தடை விதித்திருக்கிறார்கள்
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com