திருச்சி அருகே மதுக் குடிக்க பணம் தராததால் தொழிலாளர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போதை ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி குழுமணி அருகேயுள்ள எட்டரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் திங்கள்கிழமை மாலை முதல் மது போதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.
அப்போது, அதேபகுதியில் தொழிலாளர்கள் லோகநாதன் மற்றும் சுரேஷ் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அவர்களை வழி மறித்த யுவராஜ், மதுக்குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் இல்லையெனக் கூறியதை அடுத்து அவர்களிடம் தகராறு செய்துள்ளார். பணம் தராவிட்டால் கத்தியால் குத்துவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், லோகநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் லோகநாதனுக்கு குடல் சரிந்து பலத்தகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸார் சென்று யுவராஜை கைது செய்தனர்.