திருச்சி-பெங்களூர் இடையே ஆம்னி பேருந்து வழித்தட உரிமை வாங்கித் தருவதாக ரூ.7.94 லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் உள்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்தவர் கே. சுப்பிரமணியன். இவரிடம் கோவை மாவட்டம், கோவைபுதூரைச் சேர்ந்த காளிமுத்து மகன் விக்னேஷ், தனக்கு பழக்க வழக்கம் அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய சுப்பிரமணியன், திருச்சி- பெங்களூர் இடையே ஆம்னி பேருந்து வழித்தட உரிமை வாங்கித் தருமாறுக் கூறி, 2017, மே 14 ஆம் தேதி , விக்னேஷ், அவரது தந்தை காளிமுத்து ஆகியோரிடம் ரூ. 7.94 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், குறிப்பிட்டவாறு வழித்தட உரிமையை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார் விக்னேஷ். கடந்த ஜனவரி மாதம் கோவை புதூருக்கு சுப்பிரமணியன் சென்று பார்த்தபோது குடும்பத்துடன் அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுப்பிரமணியன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விக்னேஷ், அவரது தந்தை காளிமுத்து, தாய் சாந்தி, சகோதரர்கள் விஷ்ணு, ரவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய திருச்சி மாநகரக் குற்றப்பிரிவுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் மாநகரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழித்தட உரிமைக்காக சுப்பிரமணியனின் மகன் பரத்குமாரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை உள்ளிட்டவற்றை பெற்ற விக்னேஷ், அதை கொண்டு கோயம்புத்தூரில் புதிய கார் வாங்கி, திருப்பூரில் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.