இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி காந்திச்சந்தை அருகேயுள்ள வரகனேரி பிச்சைநகரைச் சேர்ந்தவர் இ. ஷேக்தாவூத் (26). இவர் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வழிப்பறி வழக்கில் ஷேக்தாவூத்தை கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் மீது திருச்சி மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஷேக் தாவூதை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோட்டை போலீஸார் பரிந்துரைத்தனர். அதன்பேரில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். அதனையடுத்து அவர், திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.