திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசு மானியத்துடன் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது: திருச்சி மாநகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தனிநபர் கழிப்பறைகள் மானிய உதவியுடன் கட்டித்தரப்படுகிறது. பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள பொதுமக்களுக்கு இத்திட்டத்தில் கழிப்பறை கட்டித்தரப்படும். இட வசதி உள்ள பொதுமக்கள் திருச்சி மாநகராட்சியின் 4 கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வழங்கலாம். திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்திலும் விண்ணப்பங்களை வழங்கலாம். இத்திட்டத்தில், மத்திய அரசு மானியமாக ரூ.4 ஆயிரம், மாநில அரசு மானியமாக ரூ.2 ஆயிரம், மாநகராட்சி பங்களிப்பு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.4 ஆயிரம் சேர்த்து ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டித்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆணையர்.