மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்.4ஆம் தேதி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மாவட்ட கமல்ஹாசன் தலைமை நற்பணி இயக்கம், மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்கள் திருச்சியில் கடந்தவாரம் கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தென்னூர் உழவர் சந்தை, திருச்சி பொன்மலை ஜி கார்னர் ஆகிய இடங்களை தேர்வு செய்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது.
ஜி கார்னர் இடத்தை கட்சித் தலைமை தேர்வு செய்துள்ளது. தமிழக அரசியல் கூட்டம், மாநாடு நடத்துவதில் திருச்சி மாவட்டம் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது. அதில், தற்போது, மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவர் கமல்ஹாசனும் இணைந்துள்ளார். இதற்காக அவரது கட்சியினர் மாநகரப் பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்யும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமல்லாது ஆட்டோக்களில் பொதுக்கூட்டம் குறித்த பிளக்ஸ்களை ஒட்டியும், துண்டு பிரசுரங்களை திருச்சி மாநகரம், ஒன்றியம், வட்டாரம், வட்டம் என அனைத்து பகுதிகளிலும் வழங்கி வருகின்றனர். ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறுகையில், பல்வேறு கட்சிகளுக்கு திருச்சிதான் அரசியலில் திருப்புமுனையை அளித்துள்ளது. இதேபோல, கமல்ஹாசனுக்கும் திருச்சி திருப்புமுனையை அளிக்கும் என்றனர். நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும், திருச்சியில்தான் தனது முதல் மாநாட்டை நடத்தவிருப்பதாக அவரது ரசிகர்களும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.