திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.9.78 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் இருந்து மலேசியா செல்வதற்காக ஏர்-ஏசியா விமானம் வெள்ளிக்கிழமை காலை புறப்படத் தயாராக இருந்தது. இதில், பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) ரூ.9.78 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. டாலர்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், விஜயகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.