திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களிலும் சனிக்கிழமை (அக்.13) இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட 6ஆவது வார்டு பகுதி மக்களுக்காக கீழகொண்டையம்பேட்டை பாரதி மாநகராட்சி பள்ளியிலும், கோ.அபிஷேகம் கோட்ட 57ஆவது வார்டில் சோழராஜபுரம் சத்துணவு மையத்திலும், அரியமங்கலம்கோட்டம் 21ஆவது வார்டில் வரகனேரி ராமசாமித்தேவர் மருந்தகத்திலும், பொன்மலை கோட்டம் 36ஆவது வார்டில் பொன்மலைப்பட்டி சகாயமாதா கோயிலிலும் முகாம் நடைபெறவுள்ளது. முகாமை நகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தொடக்கி வைக்கவுள்ளார். முகாமில், மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் தலைமையில், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், மகப்பேறு உதவியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் முகாமில் சிகிச்சை அளிக்கவுள்ளனர்.