ஆதரவற்ற 4 குழந்தைகளுக்கு உடைகள், சமையல் பாத்திரங்கள்: அமமுக பிரமுகர் வழங்கினார்

திருச்சி மாவட்டம், எட்டரை அருகிலுள்ள முள்ளிக்கரும்பூரில் பெற்றோரை இழந்து ஆதரவற்று தவித்த 4 குழந்தைகளுக்கு

திருச்சி மாவட்டம், எட்டரை அருகிலுள்ள முள்ளிக்கரும்பூரில் பெற்றோரை இழந்து ஆதரவற்று தவித்த 4 குழந்தைகளுக்கு,   துணிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலரும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலருமான ஆர். மனோகரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
ஸ்ரீரங்கம் வட்டம், எட்டரை அருகிலுள்ள முள்ளிக்கரும்பூர் முல்லைநகரைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி ரங்கநாயகி.  இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.  உடல்நலக்குறைவால் மருதமுத்தும், அவரைத் தொடர்ந்துஅவரது மனைவியும் இறந்துவிட்டதால், பெற்றோரை இழந்து 4 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வந்தனர். இதுகுறித்த செய்தி தினமணியில் வியாழக்கிழமை (அக்.11) வெளியானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முள்ளிக்கரும்பூர் கிராமத்துக்குச் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலரும், வடக்கு மாவட்டச் செயலருமான ஆர். மனோகரன்,  குழந்தைகளைச் சந்தித்து பேசி, அவர்களுக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள்,  ரூ.10,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். மேலும் குழந்தைகளை அழைத்து வந்து அவர்கள் வீட்டில் அணிந்து கொள்ளும் வகையில் ஆடைகளை எடுத்து தந்தார்.
வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த அவர், குழந்தைகளின் படிப்பு முடியும் வரை தேவையான உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனோகரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், வர்த்தக அணிச் செயலர் நாகநாதர் ராஜு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலர் கேசவன், மருத்துவர் அணிச் செயலர் கணேஷ்பாபு,  மீனவரணிச் செயலர் கணேஷ்பாபு,  இளைஞரணிச் செயலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com