இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கக் கோரி திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவசப் பேருந்துப் பயண அட்டை இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டும் சரியான நடவடிக்கை இல்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்தில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு கூடினர். நீண்டகாலமாக இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படவில்லை. மேலும், போதிய அளவில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் கல்லூரிப் பகுதிக்கு வந்து செல்லவில்லை எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் மாணவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடத்தினர். கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகவும், 10 பேர் மட்டும் தங்களுடன் வருமாறும் போலீஸார் கூறியும் மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் இலவசப் பேருந்துப் பயண அட்டை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை,பழைய அட்டை அல்லது கல்லூரியின் அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து மாணவர்களை தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.