திருச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து தெளிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தனது சுட்டுரையில் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் இருந்து வந்த தென்மண்டல இயக்குநரக அலுவலர்கள் குழுவினர் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அமைச்சர் சுரேஷ் பிரபு சுட்டுரையில், விபத்து குறித்து டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையும் தொடங்கியுள்ளது. முழு விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை குழு வருகை
சம்பவம் குறித்து தென்மண்டல இயக்குநர் அலுவலகத்திலிருந்து (சென்னை) பொது மேலாளர் அந்தஸ்த்தில் உள்ள 3 அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை பிற்பகல் திருச்சி வந்தது. அவர்கள் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை விமான நிலைய ஆணையக் குழு தென்மண்டல இயக்குநரிடம் சமர்பிப்பர். அவர் அந்த அறிக்கையை டிஜிசிஏ விசாரணைக் குழுவிடம் அளிப்பார். என்றாலும் டிஜிசிஏ விசாரணை தனி விசாரணை மேற்கொள்ளும்.