பிளாஸ்டிக் மாசில்லா திருச்சி மாநகரத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி சார்பில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை தொடக்கி வைத்து மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் பேசியது: 2019 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணிப்பைகள், காகித உறைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்றார்.
இந்த பேரணி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி சேவா சங்கம், முத்தரையர் சிலை வழியாக மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில், நேரு, சர்வைட், குழந்தை ஏசு, இந்திரா சேஷாத்திரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகளும் காவேரி மெடிக்கல் சென்டர் நர்சிங் மாணவிகள், மாநகராட்சிப் பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், வரி தண்டலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு வீடுகள் தோறும், கடைகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியபடி சென்றனர். ஏற்பாடுகளை உதவி ஆணையர் தயாநிதி, நிர்வாக அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் பிரின்ஸ் சகாயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.