திருச்சி மாவட்டம், மணப்பாறையில், பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி மாவட்ட அளவிலான கணிதக் கருத்தரங்கு, அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியை மாவட்டக் கல்வி அலுவலர் ராஜலிங்கம் தொடக்கிவைத்தார். தலைமையாசிரியர் அருளரசன் முன்னிலை வகித்தார்.
மணப்பாறை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி மற்றும் மணிகண்டம் ஒன்றியங்களைச் சேர்ந்த 512 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 225 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கணிதக் கருத்தரங்கில் மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியும், அறிவியல் கண்காட்சியில் மேல்நிலைப் பள்ளிகளில் திருச்சி கே.கே. நகர் எஸ்.பி.ஒ.ஐ.ஏ. பள்ளி முதலிடமும், மணப்பாறை புனித அந்தோனியார் பள்ளி இரண்டாம் இடமும், அம்மாபேட்டை ஹோலி பேமிலி ஆர்.சி. பள்ளி மூன்றாம் இடமும் பிடித்தன. உயர்நிலைப் பள்ளிகளில் மணியங்குறிச்சி அரசுப் பள்ளி முதலிடமும், மணப்பாறை சிறுமலர் பெண்கள் பள்ளி 2-ஆம் இடமும், ஊத்துக்குளி அரசுப் பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன.
நடுநிலைப் பள்ளிகளில் செவல்பட்டி அரசுப்பள்ளி, இனாம்புதூர் சத்திரம் அரசுப் பள்ளிகள் முதலிடமும், மலையடிப்பட்டி அரசுப்பள்ளி மற்றும் நாகமங்கலம் கிரியா மெட்ரிக் பள்ளிகள் 2-ஆம் இடமும், துவரங்குறிச்சி அரசு பெண்கள் பள்ளி 3-ஆம் இடமும் பெற்றன.
ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளில் முத்துக்குளம் நேரு நினைவு பள்ளி முதலிடமும், ஆலம்பட்டி ஊராட்சிப்பள்ளி 2-ஆம் இடமும், போலம்பட்டி ஊராட்சி பள்ளி 3-ஆம் இடமும் பெற்றன. வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. வென்றோர் மண்டல போட்டியில் பங்கேற்பர்.