திருச்சியில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளி இளைஞர்கள், சிறப்புப் பள்ளிக் குழந்தைகளுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருச்சி டாஸ் அமைப்பு சார்பில் 8 ஆவதுஆண்டாக டாஸ் டேலண்ட் பெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்போட்டி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.ரவிச்சந்திரன், பள்ளித் தலைமையாசிரியர் சைமன் சுகுமார் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.
சிறப்புப் பள்ளிக் குழந்தைகளுக்கு 100, 200, 400 மீட்டர் ஓட்டம், கால்பந்து, குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், கண் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகள் வெவ்வேறு வயதின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
28 சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட குழந்தைகள், 50 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் போட்டியில் பங்கேற்றனர். டாஸ் திறமைத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் வீணா வித்யா, டாஸ் தலைவி அக்சயா, முதன்மைச் செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குழந்தைகளுக்கான கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெறும்.