மணப்பாறை அருகே திங்கள்கிழமை மாலை பெய்த மழையின்போது, இடி தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கன்னிவடுகப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்மணி மனைவி தெய்வானை(31). தமிழ்மணி தனது களத்து வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார். இரவில் ஊரில் உள்ள
வீட்டிற்கு வந்து தங்குவது வழக்கம். திங்கள்கிழமை மாலை வையம்பட்டி, புத்தாநத்தம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழை சற்றே நின்ற சமயத்தில் தெய்வானை உணவுப்பொருள்களுடன் கருத்தக்கண்ணு என்பரின் தோட்டத்து வழியாக, தனது களத்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இடி தாக்கியதில் தெய்வானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் தெய்வானை வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றபோது, சம்பவ இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் தெய்வானை உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.