பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959ஆம் ஆண்டு, இந்திய எல்லையோரத்தில் லடாக் பகுதியில் நடந்த சீனப்படையின் தாக்குதலின்போது, காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், பணியின் போது மரணமடைந்த காவல்துறை மற்றும் காவல் படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர்நீத்தோர் நினைவுத்தூணுக்கு மத்திய மண்டல (திருச்சி) காவல்துறைத் தலைவர் வரதராஜூ, துணைத் தலைவர் லலிதா லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவல் படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.