சமயபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
சமயபுரம் அருகே நடுஇருங்களூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வேணுகோபால் மகள் கீர்த்திகா(19). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கீர்த்திகா, அவரது பெரியப்பா மகன் க.முருகனுடன்(28) இரு சக்கர வாகனத்தில் கொள்ளிடம் டோல்கேட் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கீர்த்திகா நிகழ்விடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த முருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.