திருச்சி மாத்தூர் பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் சடலத்தை மீட்டு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அடுத்த அண்ணாநகர் சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ (28). வேன் ஓட்டுநர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியூரில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமணத்துக்குச் செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை காலை திருச்சி மாத்தூர் பகுதியில் உள்ள காட்டாற்றுப் பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். நவல்பட்டு போலீஸார் வழக்கு பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.