மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை அத்துமீறி மருத்துவனைக்குள் நுழைந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளரைக் கண்டித்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அடுத்த பின்னத்தூரில் கோயில் முறை தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த நல்லபெருமாள் - ரெங்கராஜ் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ரெங்கராஜ் குடும்பத்தினர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லபெருமாள் குடும்பத்தைச் சேர்ந்த வடிவேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், அத்துமீறி தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து வடிவேலை அழைத்துச் சென்றதாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.