திருச்சி மாவட்டம், மணப்பாறையில், மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் உள்ள பொன்முச்சந்தி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மணப்பாறை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. மணப்பாறை காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜீவ்காந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.