இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் திருச்சிப் பிரிவு, யங் இந்தியன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் உடல் உறுப்புத் தான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செப்.30ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் திருச்சிப் பிரிவுத் தலைவர் ஏ.எஸ்.அனந்தகிருஷ்ணன், காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் மேலாண் இயக்குநரும், மாரத்தான் ஓட்ட நிகழ்வு பிரிவுத் தலைவருமான மருத்துவர் எஸ்.சந்திரகுமார் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:
திருச்சியில் பொது நலனுக்காக நடத்தத் தொடங்கிய மாரத்தான், நான்காம் ஆண்டாக செப்.30ஆம் தேதி தென்னூர் உழவர் சந்தையில் நடத்தப்படுகிறது. உடல் உறுப்புத் தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கி மாரத்தான் நடத்தப்படுகிறது.
5,10,21 கி.மீ. தொலைவு அடிப்படையில் ஓட்டம் இருக்கும். உழவர்சந்தையில் தொடங்கி அண்ணா விளையாட்டரங்கத்தில் நிறைவடையும். 21 மற்றும் 10 கி.மீ. தொலைவு ஓட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு ரூ.2.50 லட்சம் பரிசுத் தொகை பிரித்துத் தரப்படும்.
www.trichymarathon.com, info@trichymarathon.com என்ற இணையதளம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கிளைகளில் முன்பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம்.
5 கி.மீ. தொலைவு ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும், 10 கி.மீ. ஓட்டத்தில் 12 வயதுக்கும் மேற்பட்டோரும் பங்கேற்கலாம். 21 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்க மருத்துவச் சான்று அவசியமானது. கடந்தாண்டில் 10,000 பேர் பங்கேற்ற நிலையில் நிகழாண்டில் 12,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு பிரிவுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர் அவர்கள்.