சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், மாணவர்கள் பிரிவில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியும், மாணவிகள் பிரிவில் சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியும் முதலிடத்தைப் பிடித்தன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் கழகம் சார்பில் 14 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கான கூடைப்பந்துபோட்டி சிறுகனூர் அங்காளம்மன் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
6 கல்லூரிகள் பங்கேற்று விளையாடிய போட்டியின் இறுதியாட்டத்தில், சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியை 17-12 என்ற புள்ளிக்கணக்கில் கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியை 10-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சிறுகனூர் அங்காளம்மன் பொறியியல் கல்லூரி மூன்றாமிடத்தைப் பிடித்தது.
மாணவர் பிரிவு : இருங்களூரிலுள்ள எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியில் மாணவர் பிரிவு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 16 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் இறுதியாட்டத்தில், சமயபுரம் எஸ்.ஆர்.எம்.டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியை 43-42என்ற புள்ளிக்கணக்கில் வென்று பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியை 39-35 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி மூன்றாமிடத்தைப் பிடித்தது.
இந்த வெற்றிகளின் மூலம் மண்டலங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ரோவர் பொறியியல் கல்லூரியும், கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியும் பெற்றுள்ளன.