திருச்சி மாநகரில் கோட்டை காவல் நிலையத்துக்குள்பட் பகுதியில் வீடு மற்றும் கடைகளில் பணத்தை திருடிய வழக்கில் இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பெரிய சௌராஷ்டிரா தெரு அருகிலுள்ள மணியக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சாந்தாராம். ஏப்ரல் 25 ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 5 பவுன் நகை திருட்டு போனதாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுபோல, திருச்சி மதுரை சாலையில் தனது நண்பர் நசீர் அகமதுடன் இணைந்துலட்சுமி கடை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி இரவு கடையிலிருந்து ரூ.50,100 ரொக்கம் திருட்டுபோனதாகவும் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருச்சி கீழரண்சாலை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தனிப்படை போலீஸார் நடத்திய சோதனையில் அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்த போது, அவர் கருவாட்டுப்பேட்டை ஜெகதீசன் (22) என்பது தெரிய வந்தது. மேலும், கடையில் ரூ.50,100 ரொக்கத்தை திருடியதை ஒப்புக் கொண்டு, அதில் செலவு செய்த பணம் போக மீதம் வைத்திருந்த ரூ.29,300 போலீஸாரை பறிமுதல் செய்தனர்.
இதுபோல, சின்னக்கடைவீதி- பாபுசாலை சந்திப்புப் பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது, அவர், வாழவந்தான்கோட்டை ஜோசப் வின்சென்ட் மகன் சார்லஸ் (30) எனத் தெரிய வந்தது., லட்சுமி வீட்டில் 5 பவுன் நகைகளைத் திருடியதையும் அவர் ஒப்புக் கொண்டார். இருவரையும் கைது செய்தனர்.