விழுப்புரம் மாவட்டத்தில் பதிவுச் சான்று இல்லாமல் இறால் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக இறால் வளர்க்கவும், 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுச் சான்றை புதுப்பிக்கவும், விண்ணப்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மாவட்டத்தில் இறால் பண்ணைகள், கடல்நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திடமிருந்து பதிவுச் சான்று பெற்று இறால் வளர்க்க வேண்டும், பதிவுச் சான்று பெறாமல் இறால் வளர்த்தால், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்து, குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட வன அலுவலர் ஆனந்தன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் மணிமேகலை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.