விவசாயிகள் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டுமென கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு 2016-17ஆம் ஆண்டில் பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து முக்கியமான உணவுப் பயிர்கள், வணிகப் பயிர்கள், தோட்டப் பயிர்களை காப்பீடு செய்யலாம். இந்த புதியத் திட்டத்தில் விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, முளைத்து கருகியது, நடவு பொய்த்தல், பயிர் பருவ இடைக்கால இழப்பீடு, அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் ஆகிய நிகழ்வுகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
காப்பீட்டுத் தொகையானது அதிகபட்சமாக ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.24,600, கரும்புக்கு ரூ.45 ஆயிரம், உளுந்துக்கு ரூ.12 ஆயிரம், நிலக்கடலைக்கு ரூ.2 ஆயிரம், கம்புக்கு ரூ.5 ஆயிரம், எள்ளுக்கு ரூ.6,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.369 வீதம் தங்கள் பகுதியில் உள்ள கிராம கூட்டுறவு வங்கி மற்றும் இதர வங்கிகளில் பயிர் செய்ததற்கான ஆவணங்களுடன் நவ.30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் இதுபோன்று நிர்ணயிக்கப்பட்ட பிரீமிய தொகை உரிய காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும்.
பயிர்க் கடன் பெறாத விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகலாம். எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழையை கருத்தில் கொண்டு விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுமென அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.